வெள்ளி, 16 அக்டோபர், 2015

எனக்குச் சொர்க்க வாசல் திறக்குமா?

எனக்குச் சொர்க்க வாசல் திறக்குமா?

வாயில்திற வுண்டிட மலர்ந்தவ னசம்போல் 
நேயன்வ தனந்திகழ நேயமொடு நோக்கி 
ஆயென வெதிர்தனையெ னையவிவண் செய்ய 
தீயன்வர வொல்வதுகொல் யாதுனது சித்தம்.


சொர்க்கத்தின் வாயில் கதவு திறக்கப்பட்டதும்; மலர்ந்த வனசம் போல் (மலர்ந்த தாமரை மலரைப் போல); நேயன் வதனந் திகழ (சொர்க்கத்துக்கு பிரயாணம் செய்யும் விருப்பதுடன் உள்ள); நேயமொடு நோக்கி (சொர்க்கதின் வாயிற் காவலனை அன்புடன் நோக்கி); ஆயென எதிர்ந்தனை (என் தாயைப் போல என் முன் தோன்றி); இவண் வெய்ய தீயன் வர ஒல்வது கொல் (இந்தக் கொடிய பாவி இங்கு வர தகுமா? உன் விருப்பம் என்ன? என்று சொர்க்கத்தின் வாயில் காவலனைக் கேட்கிறான்.

சொர்க்கத்தின் கதவு

சொர்க்க கதவைத் திறப்பது:

இன்னவித மாகவுரை யாடியெழி லாரும் 
வன்னமணி வாயில்செறி மாண்கதவு தட்டி 
உன்னிநனி யோலமிட வுள்ளுருகி யுள்ளா 
மன்னுகடை காவலன் மருங்குற வணைந்தே.

இன்ன விதமாக (இந்தவிதமாக) உரையாடி, எழில் ஆரும் (அழகு நிறைந்த) வன்ன மணிவாயில் (பல வண்ண மணிகள் அமைந்த வாயில்) உள்ள கதவைத் தொட்டு; உன்னி நனி ஒலம் இட (இறைவனை நினைத்து மிகவும் உரத்த குரலில் முறையிட; உள்ளாமன்னு (உள்ளே உள்ள) கடைகாவலன் (வாயில் காவலன்), உள்உருகி (உள்ளம் இரங்கி), மருங்கு உற அணைத்து (தேவனின் கட்டளையை நினைத்து),


செவ்வாய், 13 அக்டோபர், 2015

ஸ்டால்யன்

//Stallion (stal-yen) “ஸ்டால்-யன்” குதிரை. காயடிக்காத குதிரை. மாடுகளில் உழவுக்கான காளை மாடுகள் உள்ளன. காயடிக்காத காளை “பொலி காளை”. இனவிருத்தி செய்யப்படுவதற்காக வளர்க்கப்படும் காளைகள். இப்படிப்பட்ட பொலிகாளைமாடு போன்றதே “பொலி குதிரை”. அதன் பெயர் ஸ்டால்-யன். ஆடுகளில் கூட இப்படி பொலி ஆடுகள் உள்ளன. அவைகள் Stud (sted) “ஸ்டடு”. குதிரைக்கு சமஸ்கிருத மொழியில் “அஸ்வ” என்று பெயர். Steed ஸ்டீட், இது போருக்கு போகும் குதிரை. வீரக் குதிரை. குதிரைவீரன் அமர்ந்த செல்லும் குதிரை. குதிரை வீரனுக்கு “நைட்” என்ற பெயர் knight. இதை பட்டமாக கொடுப்பார்களாம். கூட்டமாக போர்வீரர்கள் குதிரை மேல் அமர்ந்து சென்றால் கேவல்ரி cavalry (cav-al-ry). பெண் குதிரைகளுக்கு mare  மேர் என்று பெயர். பொதுவாக horse என்றால் அது ஆண் குதிரைதான். பெண் குதிரையை mare என்றே சொல்ல வேண்டும். Horse என்றால் ஆணோ, பெண்ணோ பொதுவில் குதிரைதான். ஆனால் ஒரு வழக்கில் இதை வைத்து ஒரு வேடிக்கை தீர்ப்பு வருகிறது. மதராஸ் பிரசிடென்சியில் பிரிட்டீஸ் ஆட்சி காலத்தில், நான்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டி ஓடிக் கொண்டிருந்த்து. திடீரென்று ஒருநாள், நான்கு குதிரைகள் பூட்டி வண்டிகளை ரோட்டில் ஓட்டக் கூடாது என்று சட்டம் வருகிறதாம். ஒரு பெரிய மனிதர் இந்த நான்கு குதிரைபூட்டிய வண்டியில் பயணம் போகிறார். அவர் மீது வழக்கு. அந்தப் பெரிய மனிதருக்காக, மதராஸில் பிரபலமான கிரிமினல் வக்கீல் ஆஜராகிறார். நான்கு குதிரைகள் பூட்டிய வண்டியில் வந்தது தவறுதானே என்று நீதிபதி கேட்கிறார். பதில்: அந்த நான்கு குதிரைகளில் ஒன்று mare  (பெண் குதிரை) என்கிறார் வக்கீல். Horse குதிரை என்றால் ஆண் குதிரையை மட்டுமே குறிக்கும். Mare என்றால் பெண் குதிரை. சட்டத்தில் horse  என்னும் ஆண் குதிரையில்தான் வரக்கூடாது என்று உள்ளது. Mare என்னும் பெண் குதிரையில் வந்தால் சட்டப்படி தவறில்லை என்று சொன்னாராம். பெரிய மனிதர் தப்பிவிட்டார். // 
// hamlet (ham-let) ஹாம்லெட். சின்ன கிராமத்துக்குப் பெயர் ஹாம்லெட். குக்கிராமம். இங்கிலாந்து நாட்டில் ஒரு கிராமத்தில் 100 பேருக்கு கீழ் வாழ்ந்தால், அந்த கிராமம் hamlet. தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் 1000 பேருக்கு கீழ் மக்கள் தொகை இருந்தால், அந்த கிராமம் ஹாம்லெட் கிராமம் அல்லது குக்கிராமம். அந்த குக்கிராமத்தின் பெயரை எல்லா இடங்களிலும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம், ஆனால், வருவாய்த்துறை ஆவணங்களில் அந்த குக்கிராமத்துக்கு பக்கத்தில் உள்ள பெரிய கிராமத்துடன் இணைத்து அந்த பெரிய கிராமத்தின் பெயரையே இதற்கும் வைத்து விடுவார்கள். ஆனால் அந்த பெரிய கிராமத்தின் பெயருடன் “B”  என்ற எழுத்தை சேர்த்து விடுவார்கள். அப்படியென்றால் அது ஒரு குக்கிராமம் hamlet  என்றும், தனிகிராமம் separate Revenue Village   இல்லை என்றும் அர்த்தமாகுமாம். //

ஜூபிடர்

Jupiter ஜூபிடர் என்றால் குரு அல்லது வியாழன். தமிழில் வியாழன். மற்ற எல்லா இந்திய மொழிகளிலும் இவர் பெயர் குரு. Mars என்றால் செவ்வாய். இந்த இரண்டும் சில நேரங்களில் குழப்பிவிடும். Sun, Moon, Mercury, Venus, Saturn, இவைகளை அடையாளம் கண்டுகொள்வதில் பிரச்சனை ஏதும் இல்லை. Jupiter என்று பெரிதாக பெயர் இருந்தால் குரு என்று சிறிதாக இருக்கும். Mars  என்று சிறிய பெயரில் இருந்தால் செவ்வாய் என்று பெரிதாக இருக்கும். சும்மா இப்படி அடையாளம் வைத்துக் கொள்ள வேண்டியதுதான்! ஜூபிடர் என்பது ரோமன் மக்களின் ஆகாயக் கடவுளாம். இவர்தான் தலைமை கடவுளும் கூட. இவர் மனைவி பெயர் Juno. இந்த ஜூனோ சொர்க்கத்தின் ராணியாம், Queen of heaven. (heaven என்றால் சொர்க்கம் தானே?) இவர் ஜூபிடர் கடவுளுக்கு மனைவியாக, ராணியாக இருந்தாலும், இவருக்கும் தனி department இருக்கிறதாம். இவர் ஒளி, பிறப்பு, பெண், திருமணம் இவைகளுக்குறிய பெண் கடவுளாம், Goddess. ரோமானியர்களுக்கு இவர்கள்தான் தலைமை கடவுள். Jupiter & Juno.  நம்ம ஊரில் சிவபெருமான்-பார்வதி மாதிரி. இதேபோல, கிரேக்கர்களுக்கும் தலைமை கடவுளும் அவர் மனைவியும் உள்ளனர். உலகம் பூராவும், சாமி இல்லாமல் வாழவே மாட்டார்கள் போல. கிரேக்க சாமிக்குப் பெயர் Zeus. இவரை ஜூஸ் என்றும் ஜீயஸ் என்றும் பலவாறு உச்சரித்துக் கொள்கின்றனர். என் காதில் கேட்டவரை இவரை ‘Zus’ ஜ்(உ)ஸ் என்றுதான் உச்சரிக்கிறார்கள். இந்த கிரேக்க சிவபெருமானின் பெண்டாட்டி சாமி பெயர் Hera. (hir-e) ஹிரே என்று பெயர். இந்த ஜூஸ் சாமிக்கு இந்த ஹிரே மனைவியாக இருந்தாலும், உண்மையில் இவர்கள் இருவரும் அண்ணன்-தங்கை. இவர்கள் மனிதர்களில் முதல் தோற்றம் என்பதால் இந்தக் குளறுபடிகள் உண்டு. அதற்குப்பின் இந்த குழப்பம் எல்லாம் இல்லை. ஆரம்பகால ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு வழியில்லையே! மன்னித்துவிடுவோம். Hera, the consort of Zeus.  இராஜா நாட்டை ஆள்வார். இராஜாதான் அதிகாரம் மிக்கவர். அவரின் மனைவி துணைக்கு இருப்பார். இராஜாங்கத்தில் பக்கத்தில் இருப்பார். அவருக்கு இந்த அரசாங்க அதிகாரம் ஏதும் தனியே கிடையாது. இராஜாவின் மனைவி ராணி என்ற அந்தஸ்து மட்டுமே. இப்படிப்பட்ட ராணிகளை Queen Consort என்று சொல்வர். இராஜாவின் மனைவி ராணி, அவ்வளவே. இது இல்லாமல், ராணியாகவே அதிகாரத்தில் இருந்து நாட்டை ஆளும் ராணியும் இருக்கிறார். இப்போது உள்ள பிரிட்டீஸ் எலிசபத் மகாராணி மாதிரி. அவரே நேரடியாக நாட்டை ஆள்வார். அவரின் கணவருக்கு ஆட்சி அதிகாரம் ஏதும் கிடையாது. ராணியின் கணவர் அவ்வளவே. இப்படிப்பட்ட ராணிகளை, நேரடியாக ஆட்சி செய்யும் ராணிகளை Queen Regnant என்பர். ஒரு சில நேரங்களில் மன்னர் சின்ன பையனாக இருப்பார். அப்போதும் இந்த இளவரசரின் தாயார் Queen Regnant ஆக இருந்து ஆட்சி செய்வார். குயின் ரெக்னன்ட். நேரடி ஆட்சி செய்யும் ராணி. Regnum ரெக்னம் என்றால் kingdom என்று லத்தீன் மொழியில். கடவுளின் கட்டளைப்படி ஆட்சி செய்வரை kingship என்று அழைப்பார்களாம். // 

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

சர் வின்ஸன் சர்சில் Sir Winston Churchill

சர் வின்ஸன் சர்சில் Sir Winston Churchill
இவர் இங்கிலாந்தின் (The United Kingdom) பிரதமராக 1951 லிருந்து 1955 வரை இருந்த பிரபலமான பிரதமர்.

இவரைப் பற்றி வேடிக்கையாக ஒரு கதையும் உண்டு. (அது உண்மைதானாம்).

இவர் பிரதமர் பதவியில் இருக்கும்போது, இவருக்கு ஒரு உதவியாளர் இருந்தார். சர்ச்சில் ஆங்கிலப் புலமை மிகுந்தவர். வார்த்தை ஜாலத்துடன் எழுதுவார். இவரைப் போலவே ஆங்கில அறிவு படைத்தவர் இவரின் உதவியாளரும். சர்சிலின் கடிதங்களை தயார் செய்து சரிபார்த்து சர்சிலின் கையெழுத்துக்கு அனுப்புவாராம். சர்ச்சில் அந்த கடிதங்களில் உள்ள சிறு குறைகளை சரி செய்து, பின்னர் தன் கையெழுத்தை போட்டு அனுப்புவாராம். எப்போது கடிதத்தை அனுப்பினாலும், அதில் ஏதாவது ஒரு திருத்தம் செய்து பின்னரே கையெழுத்து போடுவாராம் சர்சில். இது அவரின் உதவியாளருக்கு மிகுந்த வருத்தத்தை அளித்ததாம். எவ்வளவு உன்னிப்பாக படித்து திருத்தி அனுப்பிய கடிதமாக இருந்தாலும், அதிலும் ஒரு குறை கண்டுபிடித்து ஒரு எழுத்தையாவது மாற்றி பின்னர் கையெழுத்துப் போடுவாராம்.

ஒருநாள், ஒரு சிறு கடிதம் தயாரிக்க வேண்டி இருந்தது. இரண்டே வரிகள் கொண்ட கடிதம். மிகக் கவனமாக ஆங்கில வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்த, எந்த இலக்கணப் பிழையும் இல்லாமல், தயாரித்து, அதை சர்ச்சிலின் கையெழுத்துக்கு அனுப்புகிறார் அவரின் உதவியாளர்.
அதைப் பார்த்த சர்சில், ஒரே ஒரு வார்த்தையை மட்டும் மாற்றி எழுதி, தன் கையெழுத்தைப் போட்டு அனுப்புகிறார் சர்ச்சில்.

வந்ததே கோபம் அவரின் உதவியாளருக்கு. நேராக சர்ச்சிலின் அறைக்குப் போகிறார். அந்தக் கடிதத்தைக் காண்பித்து, நான் எழுதிய வார்த்தையில் எந்தக் குறையும் இல்லை, எந்த இலக்கணப் பிழையும் இல்லை. சரியாகத்தானே எழுதி இருந்தேன். இதை ஏன் திருத்தினீர்கள் என்று சற்று கோபமாகவே கேட்கிறார்.

அதற்கு, சிரித்துக் கொண்டே சர்ச்சில் பதில் சொல்கிறார்.
“நீ எழுதிய கடிதத்தில் ஒரு பிழையும் இல்லை; இதுவரை எனக்கு அனுப்பிய எந்தக் கடிதத்திலும் ஒரு பிழையைக் கூட காணமுடியாது. நீ என்னைக் காட்டிலும் ஆங்கிலப் புலமை உள்ளவன் என்று எனக்குத் தெரியும். ஆனாலும், இந்த என் கையெழுத்து உள்ள கடிதங்களை பார்க்கும் நபர்கள், ஏதோ, இந்த சர்ச்சில் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்து இடுகிறார். நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்டுவிடுவார். கையெழுத்துப் போடுவதைத் தவிர, அதில் உள்ள வாசகங்களை சர்ச்சில் படிக்க மாட்டார் என்று ஊரார் நினைத்து விடக்கூடாது என்பதற்காவே, நான் வேண்டுமென்றே நல்ல எழுதியுள்ள வார்த்தைகளில் ஒரு சில திருத்தங்களை வேண்டுமென்றே என் பேனாவினால் அடித்து எழுதிப் பின்னர் கையொப்பம் இடுகிறேன். அப்படி என் திருத்தங்களைப் பார்ப்பவர்கள், நான் ஏதோ முழுவதும் படித்துவிட்டுத் தான் கையெழுத்தை போட்டேன் என்று நினைத்துக் கொள்வார்கள். அதனால்தான் அப்படிச் செய்தேன். உன்னிடம் நான் எந்த் குறையையும் காணவில்லை” என்று கூறி உள்ளார்.

சிலருக்கு தப்பை கண்டுபிடிப்பதே வேலையாக இருக்கும். அதில் சேர்ந்தவர்போல இந்த சர்ச்சிலும். வேடிக்கையான மனிதர்தான்.
**


புதன், 7 அக்டோபர், 2015

மாயை

"மாயை"

நாரதர், நாராயணனிடம் மாயை பற்றிய விளக்கம் கேட்டார். 

நாராயணன்;- "அதோ அந்த ஆற்றில் நீர் முகந்து வருக, தாக சாந்தி செய்துவிட்டு, மாயை பற்றிப் பேசுவோம்"

நாரதர் ஆற்றங்கரைக்குப் போய், முதலில் அவர் தாக சாந்தி செய்து கொண்டு, பின்னர், கமண்டலத்தில் நீர் முகந்து கொண்டு வரும்போது, ஆற்றங்கரை மணலில் சற்றே தங்கி விட்டுச் செல்லலாம் என்று ஆசையாக இருந்திருக்கிறது. அதை ரசித்துக் கொண்டு இருக்கும்போது, தூக்கம் கண்களை கட்டி சொருகி விட்டது, அயர்ந்து தூங்கிவிட்டார்.

தூக்கத்தில் ஒரு கனவு:-
"திருமணம் செய்து பிள்ளைகளைப் பெற்று பெரிய குடும்ஸ்தனாக ஆகிவிட்டார் நாரதர். ஏராளமான மாடு கன்றுகள் அவரிடம் உள்ளன. வீட்டில் வளர்க்கும் பிரிய பூனைகள் ஏராளம். நாய்கள் ஏராளம். இப்படி வாழ்ந்து கொண்டிருக்கும்போது, ஒருநாள், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. எல்லாம் அழிந்துவிடும் போல இருக்கிறது. நாரதருக்கு துக்கம் அதிகமாகிவிட்டது. மணலில் விழுந்து புரண்டு அழ ஆரம்பிக்கிறார். கை கால்களை உதறிக் கத்தி கூக்குரல் இடுகிறார்"

கனவும் முடிகிறது. திடுக்கிட்டு எழுகிறார். 

இவர்  செய்த அமளியில், கமண்டலத்தில் இருந்த நீரைக் கைதட்டிக் கொட்டிவிட்டார். 
மறுபடியும் கமண்டலத்தை எடுத்து நீர் மொண்டுவர செல்கிறார். நீரை எடுத்துக் கொண்டு ஒடுகிறார். ஐயோ! நாராயணனுக்கு தாகம் என்று சொன்னாரே. இப்படி காலதாமதம் செய்துவிட்டேனே! புலம்பல்! 

நாராயணன் இதைப் பார்த்த உரத்த குரலில் சிரிக்கிறார்.

"நாரதரரே! மாயை பற்றி உமக்கு விளங்கி விட்டதா?" என்று கேட்கிறார். 

"ஆம்! நாராயணா! தெரிந்துகொண்டேன் என்று கூறிவிட்டு, இந்த உலகத்தைப் பார்த்து சிரித்தவாறே செல்கிறார் மேல் உலகை நோக்கி.

இந்த நனவும் ஒருநாள் கனவு ஆகும். நனவு, கனவாய் பழங்கதையாய் மறையும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

சனி, 3 அக்டோபர், 2015

நாய் நமதென நரி நமதென

"நாய் நமதென நரி நமதெனப்  பிதா
தாய் நமதென நமன்றன தெனப் பிணி
பேய் நமதென மனமதிக்கும் பெற்றிபோ
லாய்நமதெனப்படும் யாக்கை யாரதே."

உறவுகள் யாரும் இல்லாமல் நோய்வாய்ப்பட்டு தனியாக காட்டில் வழியற்ற நிலை வந்து கிடக்கும் காலத்தில், இந்த உடல் யாருக்கு சொந்தமாகும்?

இந்த உடல் வீட்டில் இருந்தால், தாய் தந்தை தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடுவர்;
இந்த உடல் காட்டில் கிடந்தால், நாயும் நரியும் தங்களுக்குச் சொந்தம் என்று சொந்தம் கொண்டாடும்;
இந்த உடல் இருட்டில் கிடந்தால், பேய் தனக்குச் சொந்தம் என்று கொண்டாடும்;
இப்படியாக, அவரவர் வாய்க்கு வந்தபடி, இந்த உடலை சொந்தம் கொண்டாடிக் கொள்வர்.
இந்த உடலானது, பிறர் துன்பத்தில் வருந்துவதைப் பார்த்து அவருக்கு உதவி செய்யவே படைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து, இந்த உடலை அதற்காகவே பயன்படுத்துவேன் என்று கருதவேண்டுமாம்;