வெள்ளி, 3 ஏப்ரல், 2015

Iliad இலியட் இதிகாசம்

Iliad இலியட்;
இலியம் கவிதை; சிங்கத்தின் கவிதை; Song of Ilion or Song of Lion (இலியம் =சிங்கம்); கிரேக்க இதிகாசத்தில் கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரத்தை பற்றி பேசும் காவியம்;இதன் கதாசிரியர் ஹோமர் (Homer); உலக அளவில் மிகச் சிறந்த இதிகாசமாக போற்றப்படுகிறது இந்த இலியட் காவியம்; இந்தப் பெருமையெல்லாம் அதனை இயற்றிய ஹொமருக்கே சேரும்; ஐரோப்பிய இலக்கியங்களில் முதன் முதலில் தோன்றியது இதுவாகத்தான் இருக்கும்; சுமார் 3000 வருடங்களுக்கு முன் இது இயற்றப் பட்டிருக்கலாம்; பழைய கிரேக்க மொழியில் எழுதப்பட்ட காவியம்; இலியட் காவியத்தில், இந்தப் போர் 10 வருடங்கள் நடந்திருத்தாலும், கடைசி வருட உக்கிரப் போரைப் பற்றி விரிவாகச் சொல்லும் ஹோமர், இந்த போர் எதனால் ஏற்பட்டது (வழக்கம்போல பெண்ணால்தான்), வீரர்களின் தனிச் சிறப்பு, எப்படி முற்றுகை இடுகிறார்கள், கூட்டணிகள் எப்படியெல்லாம் உருவாகின்றன என்ற உலக உண்மைகளை புட்டுப்புட்டு வைத்திருப்பார்; இலியட் காவியம் 15,693 வரிகளைக் கொண்டது;

அட்ரெயஸ் மன்னன் கிரேக்க நாட்டின் தென்பகுதிக்கு மன்னராக இருக்கிறார்; அட்ரெயஸூம் அவருடன் பிறந்த ரெட்டைப் பிறவி தையேஸ்டெஸூம் சகோதரர்கள்; இவர்கள் இருவரையும் இவர்களின் தந்தை நாட்டை விட்டே விரட்டி விடுகிறார்; காரணம், தந்தையின் சகோதரரைக் கொலை செய்து விட்டனராம் இந்த இரட்டையர்; கொலை செய்தால் ஒலிம்பியா நாட்டுக்கு மன்னர்கள் ஆகிவிடலாம் என்று ஆசைப் பட்டனராம் இந்த இரட்டையர்கள்; இருவரும், ஏதேன்ஸுக்கு தெற்கே உள்ள மைசேனா நாட்டுக்குப் போகிறார்கள், அதுதான் அவர்களின் தாயார் ஏரோப்பின் நாடு; அங்கு மன்னன் போருக்கு போய்விட்டதால், இவர்கள் அரசாட்சி செய்கிறார்கள்; அந்த மன்னர் போரில் இறந்து விட்டதால், அந்த நாட்டை இவர்கள்  தொடர்ந்து ஆட்சி புரிகிறார்கள்;


அட்ரெயஸூக்கு இரண்டு மகன்கள், அகமேம்னான் மற்றும் மெனலாயஸ்; அமமேம்னான் என்றால் பிடிவாதக்காரன் என்று பொருளாம்; மெனலாயஸின் மனைவி பெயர் ஹெலன் ஆப் டிராய் அல்லது ஹெலன் ஆப் ஸ்பார்ட்டா; இந்த ஹெலன், கடவுள்களின் அரசனான ஜூயஸின் மகள்; எனவே இவள்தான் உலகத்திலேயே மிக அழகானவளாம்; இவள் அட்ரெயஸின் இளைய மகனான மெனலாயஸை திருமணம் செய்து கொண்டு அந்த நாட்டு ராணி ஆகி விட்டாள்; இவள் அழகில் மயங்கிய டிராய் நாட்டின் இளவரசன் பாரிஸ், இவளைக் கடத்திக் கொண்டு சென்று விட்டான்; அண்ணன் தம்பி இருவரும் படைகளைத் திரட்டி டிராய் இளவரசனுடன் போருக்கு போகிறார்கள்; இந்தப் போரே ட்ரோஜான் சண்டை Trojan War; 

ஆப்ராம் என்னும் ஆப்ரகாம்

பைபிள் வழி மூதாதையர்கள் இந்த மூன்று பேரும், ஆப்ரகாம் (ஆப்ராம்), அவர் மகன் இஸ்மாயிலும், ஐசக்கும், ஐசக்கின் மகன் ஜேக்கப் (இஸ்ரேல்);
யூதகலாச்சாரம் ஏற்படுவதற்கு இவர்களே மூதாதையர் என்றும் சொல்வர்;
ஆப்ராம் என்கிற ஆப்ரகாம்;
முதல் மனிதன் ஆதாம் முதல் ஆப்ரகாம் வரை 10 மூதாதையர்கள் இருந்திருக்கின்றனர்; இந்த முதல் 10 பேர், பெரும் வெள்ளப் பெருக்கு வருவதற்கு முன்னர் வாழ்ந்த வழிதோன்றல்கள்; (மீதி 10 பேர் வெள்ளப் பெருக்குப் பின் வாழ்ந்த வழித் தோன்றல்கள்); இதில் 10-வது வழித்தோன்றலே ஆப்ராம் என்று அழைக்கப்பட்டு பின்னர் ஆப்ரகாம் ஆனவர்; இவரின் கனவில் கடவுள் வந்து "நீ உன் தகப்பன் சாரா-வின் வீட்டிலிருந்து வெளியேறி, கானான் நாட்டுக்குப் போ; அங்கு கானான் மக்கள் வசிக்கிறார்கள்; அங்கு உன் வழித்தோன்றல்களை உருவாக்கு;" என்கிறார்; ஆனால் கானான் நாட்டில் பெரிய பஞ்சம் ஏற்படுகிறது; எனவே கானான் நாட்டை விட்டு அதன் தெற்குப் பகுதியான எகிப்துக்கு போகிறார்கள்; ஆப்ராமின் மனைவி பெயர் சாராய்; இவளுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை; எகிப்தியரைப் பார்த்து பயந்து, சாராய் என் தங்கை என்று கணவனே பொய் சொல்லி வாழ்ந்து வருகிறார்; மனைவி என்றால், தன்னைக் கொன்றுவிட்டு மனைவியை அவர்கள் எடுத்துக் கொள்வார்களாம்; எகிப்து நாட்டை ஆண்ட மன்னர் பேர்ரோ Pharaoh (இது மன்னனின் தனிப்பெயர் இல்லை; எகிப்தை ஆளும் மன்னர்களின் பட்டப் பெயர் இது); சாராய் பெண் வந்திருப்பது அந்த எகிப்து நாட்டு இளவரசனுக்கு தகவல் தெரிந்துவிட்டது; வரச் சொன்னான்; ஆப்ரகாமுக்கு மாடுகளும், கழுதைகளும், ஒட்டகங்களும், வேலைக்காரர்களும், ஏராளமாகக் கொடுத்தான் இளவரசன்; ஆனால் கடவுள், மன்னனின் இளவரசனையும், அவன் செல்வங்களையும் அழித்தான்; இளவரசனுக்கு காரணம் தெரியவில்லை; காரணத்தை தேடும்போது, சாராய் என்ற பெண் திருமணம் ஆகாதவள் இல்லை; அவள் ஆப்ராமின் தங்கையும் இல்லை; உண்மையில் ஆப்ராமின் மனைவிதான் இந்த சாராய் என்று தெரியவருகிறது; கோபம் வந்து, ஆப்ராமிடம் கொடுத்த எல்லாவற்றையும் திரும்ப ஒப்படைத்து விட்டு ஓடிவிடும்படி கூறினான் இளவரசன்; எனவே ஆப்ராம், தன் ஆடுமாடுகளுடன் ஹெப்ரான் நாட்டுக்கு (பாலஸ்தீன நாடு) வந்துவிடுகிறார்; அவர் தம்பி மகன் "லாட்" என்பவனின் குடும்பத்தை பசுமையான ஜோர்டன் நாட்டுக்கு அனுப்பி விட்டார்; ஜோர்டான் நாட்டுப் போரில், ஆப்ராமின் தம்பி மகன் லாட்டை சிறைப் பிடித்து விட்ட செய்தி ஆப்ராமுக்கு தெரியவருகிறது; ஆப்ராம் தன் கூட்டத்தை இரண்டு பிரிவாக்கி, அந்த நாட்டை தாக்கி, தம்பி மகனை விடுவிக்கிறார்; ஜோர்டான் போரில் தோற்ற சோடோம் மன்னன், ஆப்ராமைமிடம் நட்பாக ஆகிவிட வருகிறான்; வரும்போது, ரொட்டியும், ஒயினும் கொண்டு வருகிறான்; ஆப்ராமின் கனவில் கடவுள் தோன்றி, உன் மக்களை இந்த மண்ணில் பெருக வைப்பேன் என்கிறார்; ஆனால் ஆப்ராமின் மனைவியோ பிள்ளை இல்லாமலேயே இருக்கிறார்; எனவே மனைவியின் எகிப்திய வேலைக்காரி மூலம் ஆப்ராமுக்கு குழந்தை பிறக்க ஏற்பாடாகிறது; அந்தக் குழந்தை இஸ்மாயில்; குழந்தை பிறந்தவுடன் அந்த வேலைக்காரி, எஜமானி சாராயை மதிப்பதில்லை; எனவே வேலைக்காரியை விரட்டி விடுகிறார்; போகும்வழியில் ஒரு நீரூற்றுக்கு அருகில், அந்த வேலைக்காரிக்கும் அவள் குழந்தைக்கும், தேவதை தோன்றி, திரும்பி வரும்படியும், உன் மகன் மூர்கன்போல வருவான் என்று சொல்கிறது; ஆப்ராமுக்கு வயதாகி விட்டது; இப்போதுதான் அவர் பெயர் ஆப்ரகாம் என்றும், மனைவியின் பெயர் சாராய் என்பதை சாரா என்றும் கடவுள் மாற்றி விட்டுஅவரின் மனைவிக்கு மகன் பிறப்பான் என்றும் கடவுள் சொல்கிறார்; (I'll give thee a son also of her.); இப்போதுதான், கடவுளின் ஆணைப்படி, தனக்கும், மகன் இஸ்மாயிலுக்கும் (13 வயது) சுன்னத் செய்து கொள்கிறார்; ஆப்ரகாம் பிலிஷ்டைன் பகுதியில் (கஜா பகுதி) வசிக்க செல்கிறார்; அங்குள்ள மன்னன் அபிமேலக் இவர்களை விசாரனைக்கு அழைக்கிறான்; அங்கு ஆப்ரகாம் தன் மனைவி சாராவை தங்கை என்று சொல்கிறார்; மன்னனின் கனவில் கடவுள் தோன்றி, நீ, சாராவை அடைய திட்டமிட்டால் உன் நாட்டை இழப்பாய் என்றும் அவள் ஆப்ரகாமின் மனைவி என்றும் எச்சரிக்கிறார்; மறுநாள், ஆப்ரகாமிடம், 'ஏன் என்னிடம் பொய் சொன்னாய்' என்று அரசன் கேட்கிறான்; அவரும் "உண்மையில் இவள் என் சகோதரிதான்; என் தந்தையின் மகள்; ஆனால் இவள் என் தாயின் மகள் இல்லை; அதனால் எனக்கு மனைவி ஆனாள்;" என்று விளக்கம் அளிக்கிறார்; அங்குள்ள ஒரு கிணற்றுக்கு சண்டை வருகிறது; ஆப்ரகாம் ஆட்களுக்கும், பிலிஷ்டைன் (கஜா) மன்னனின் ஆட்களுக்கும்; ஆட்டுக் குட்டிகளுக்கு தண்ணீர் இறைப்பதில் பிரச்சனையாம்;
ஆப்ரகாமுக்கு சாரா மூலம், முதன் முதலில் கடவுள் சொன்னபடி, ஒரு மகன் பிறக்கிறான்; அவனுக்கு "ஐசக்" என்று பெயர் வைத்து, அவனின் 8 வயதில் அவனுக்கும் சுன்னத்தும் செய்து விடுகிறார்; ஒரு விருந்து நடக்கிறது அதில் மூத்த மகன் இஸ்மாயில், இந்த பெரியம்மா கிழவியாகி ஐசக் மகனை பெற்றதற்காக கேலி செய்கிறான்; இதை கணவனிடம் சொல்லி மூத்த மகன் (வேலைக்காரியின் மகன்) இஸ்மாயிலை விரட்டிவிடும்படி கேட்கிறார்; என் மகன் ஐசக்குடன் அவன் பங்குக்கு வரக்கூடாது என்றும் சொல்கிறார்; ஆப்ரகாமுக்கு வருத்தமாகி விட்டது; கடவுளிடம் இதற்கு தீர்வு சொல்லும்படி கடவுளை வேண்டுகிறார்; "கவலைப்படாதே, உன் மனைவி சொல்லியபடியே செய், ஒன்றும் ஆகாது" என்று கடவுள் சொல்கிறார்; "ஐசக் மூலம் உன் வம்சத்தை உருவாக்குவேன், அவன் உனது வாரிசு; என்றும், இஸ்மாயில் மூலம் ஒரு தேசத்தை உருவாக்குவேன், அவனும் உன் இரத்த வாரிசே; என்றும் கடவுள் ஆப்ரகாமிடம் ஆறுதலாகச் சொன்னார்; மறுநாள் இஸ்மாயிலையும் அவன் தாயையும் பொருள்களை கொடுத்து வெளியே அனுப்பி விட்டார்; காடுகளில் அழைந்து திரிந்து கடவுளை வேண்டி அழுதனர்; ஒரு தேவதை தோன்றி, 'உங்களுக்கு என்றே தனி நாட்டை உருவாக்குவேன்' என்று கூறியது; பின்னர் தான் பிறந்த எகிப்து மண்ணில் தன் மகன் இஸ்மாயிலுக்கும் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்து விடலாம் என்று கருதி பெண்தேடினார்;
இதற்கிடையில், ஆப்ரகாம் கனவில் கடவுள் தோன்றி, உன் மகன் ஐசக்கை எனக்கு பலி கொடு என்று கேட்டார்; அதை அப்படியே ஏற்று, மகனைக் கூப்பிட்டுக் கொண்டு மலை ஏறினார்; அங்கு மகனை பலி கொடுக்க தயாரானபோது, தேவதை தோன்றி "உன் மகனை விட்டுவிடு; அதற்குப் பதிலாக ஒரு ஆட்டை பலி கொடு" என்று சொல்லியது; கடவுள் சொன்னதை நம்பிய ஆப்ராகாமுக்கு நிறைய செல்வத்தையும் மக்கள் கூட்டத்தையும் கொடுத்தாராம் கடவுள்;
ஆப்ரகாமின் மனைவி சாரா இறக்கிறார்; அதற்குபின்னும் ஒரு பெண்ணை துனைவியாக வைத்துக் கொள்கிறார்; அவருக்கு 6 மகன்கள் பிறக்கிறார்கள்; 175 வருடம் வாழ்ந்து பின்னர் ஆப்ரகாம் இறக்கிறார்;
யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் இவர்கள் அனைவருக்கும் இந்த ஆப்ரகாம்தான் மூதைதையர் என்கிறார்கள்;
ஆப்ராகாமின் ரத்த வழி வந்தவர்களை யூதர்கள் என்றும்;
ஆப்ராகாமின் கடவுள் நம்பிக்கையைக் கைக் கொண்டவர்கள் கிறிஸ்தவர்கள் என்றும்;
ஆப்ரகாம் என்பவர் (ஆதாம் முதல், பின்னர் வந்த முகமது நபிகள் வரை  வந்த) கடவுள் தூதர் என்று மூஸ்லீம்களும் ஏற்றுக் கொண்டார்கள்;


வியாழன், 2 ஏப்ரல், 2015

ஒலிம்பஸ் மலை Mount Olympus

 ஒலிம்பஸ் மலை Mount Olympus
கிரேக்க இதிகாசத்தில் இந்த ஒலிம்பஸ் மலை கதாநாயகனாவே உள்ளது. இங்குதான் ஆதி கடவுள்கள் (டைட்டன்ஸ்) வசித்துள்ளனர்; சிவனுக்கு கைலாசம் இருப்பிடம் என்பதுபோல, ஜூயஸூக்கு இந்த ஒலிம்பஸ் மலைதான் கைலாசம் என்னும் வசிப்பிடம்; ஒலிம்பஸ் என்றால் சொர்க்கம்; கடவுள் வாழும் இடம் சொர்க்கமாகத்தானே இருக்க முடியும்; கிரீஸ் நாட்டின் கிழக்கு பகுதியில் இந்த ஒலிம்பஸ் மலை இருக்கிறது; மிக உயரமான மலை; சுமார் 9,500 அடி உயரம்; ஐரோப்பா நாட்டிலேயே பெரிய மலை; (எவரஸ்டின் உயரம் 29,000 அடி); ஒலிம்பஸ் மலை மொத்தம் 52 முகடுகளை கொண்டது; இந்த முகடுகளில் மிக உயரமான முகடுதான் "மிட்திகாஸ் முகடு"
இந்த ஒலிம்பஸ் மலையில்தான் கிரேக்க இதிகாசக் கடவுள்கள் வசித்தார்கள்; யுரானஸின் மகன் குரோனஸ்; இந்த குரோனஸூக்கு மொத்தம் 6 மகன்கள், 6 மகள்கள்; இந்த 12 பேரும்தான் முதல் கடவுள்கள்; இவர்களை டைடன்ஸ் என்று சொல்வர்; இந்த 12 பேரும், இவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் (தேவதைகள்) எல்லோரும் வசித்த இடம்தான் இந்த ஒலிம்பஸ் மலை; இந்த 12 கடவுள்களும் ஒலிம்பஸ் மலையில் வாழ்ந்ததால், இவர்களை "ஒலிம்பியன்ஸ்" என்று அழைப்பர்;
1) ஜூயஸ் = இவர்தான் கடவுள்களின் அரசர்; (தலைமைக் கடவுள்); ஆகாயம், இடி, மின்னல், சட்டம், ஒழுங்கு, நீதி, இவைகளுக்கு இவர்தான் கடவுள்; (இவர்தான் குரோனஸ்-ரியா இவர்களின் 6 குழந்தைகளில் இவர்தான் கடைசி மகன்); இவரின் மனைவி ரியா; இதுதவிர வேறு காதலிகளும் உண்டு;
2) ஹிரா = ஜூயஸின் மனைவி; கடவுள்களின் ராணி; இவர் திருமணம், குடும்பம் இவைகளுக்கு கடவுள்;
3) பொஷிடான் = ஜூயஸின் தம்பி; கடல், நிடுநடுக்கம், கடல் அலை இவைகளுக்கு கடவுள்;
4) டெமிட்டர் = ஜூயஸின் தங்கை = விளைச்சல், இயற்கை, இவைகளுக்கு கடவுள்;
5) ஏதெனா = ஜூயஸின் மகள் = அறிவு, ஆற்றல், முன்னேற்றம் இவைகளுக்கு கடவுள்;
6)  அப்போலோ = (இவர் இரட்டையர்; இவருடன் பிறந்தவர் அர்ட்டமிஸ்); ஜூயஸின் மகன்; வெளிச்சம், புத்திசாலித்தனம், ஆறுதல், இருட்டு, கலை, பாடல், வில்வித்தை, இளமை, அழகு இவை எல்லாவற்றுக்கும் கடவுள்;
7) அர்ட்டமிஸ் = (இவள் இரட்டையர்; இவளுடன் பிறந்தவர் அப்போலோ); ஜூயஸின் மகள்; வேட்டை, வில்வித்தை, கற்பு, விலங்குகள் இவைகளுக்கு கடவுள்;
8) ஏரெஸ் = ஜூயஸின் மகன்; போர், கொடுமை, ரத்தம் சிந்தல் இவைகளுக்கு கடவுள்; போர்கடவுள்;
9) அப்ரோடைட் = ஜூயஸின் மகள்; அன்பு, காதல், ஆசை இவைகளுக்கு கடவுள்; காதல் கடவுள் இவரே;
10) ஹெபாயஸ்டஸ் = ஜூயஸின் மனைவி ஹெராவின் மகன்; இரும்படித்தல், கைத்தொழில், நெருப்பு; இவைகளின் கடவுள்;
11) ஹெர்மஸ் = ஜூயஸின் மகன்; கடவுள்களுக்கு தூதுவன்; வியாபாரம், தொழில், திருட்டு, விளையாட்டு இவைகளுக்கு கடவுள்;
12) ஹெஸ்டியா = குரோனஸ்-ரியாவின் முதல் மகள்; குடும்பத்துக்கு கடவுள்; (இவரை இந்த கூட்டத்தில் சேர்க்க மாட்டார்களாம்);
13) டைனிசஸ் = ஒயின் கடவுள்; ஜூயஸின் மகன்; நாடகத்துறையின் கடவுள்;
 இவர்கள் எல்லோருமே இந்த ஒலிம்பஸ் மலையில்தான் கூட்டமாக வாழ்ந்திருக்கிறார்கள்; இவர்கள் எல்லோரும் மலையில் அடிக்கடி கூட்டம் கூடுவார்கள்;

**

புதன், 1 ஏப்ரல், 2015

Cronus குரோனஸ் கடவுள்

 Cronus குரோனஸ்
கிரேக்க இதிகாசப்படி --
கடவுள் யுரானஸின் கடைசி மகன் தான் இந்த குரோனஸ்; இந்தக் கடைசி மகன்தான், தன் தாய் கயாவின் (Gaia) கட்டளையை நிறைவேற்றுவதற்காக, தன் தகப்பனார் யுரானஸின் விரைகளை அறுத்து கடலில் எறிந்துவிட்டவர்; தாய் கயாதான் அந்த அரிவாளாக உருவம் மாறி, மகனுக்கு அரிவாளாக இருந்தார்; எனவே தான் இந்த குரோனஸ் எப்பொதும் அந்த அரிவாளுடன் காட்சி தருவார்; துணிச்சல்மிக்கவர் இந்த குரோனஸ் கடவுள்; ஆதிக் கடவுள் யுரானஸ் அவர்களின் 6 மகன்கள் 6 மகள்களில் கடைசி மகன்தான் இந்த குரோனஸ்; இந்த மகன்கள் கூட்டத்தை டைட்டான்ஸ் கூட்டம் என்பர்;
 ("கத்தியை எடுத்தவன் கத்தியாலேயேதான் சாவான்." குரோனஸூக்கும் இதே கதிதான் பின்னர் நேர்ந்தது; இவரின் மகன், பின்நாளில் இவரை போட்டுத் தள்ளிவிட்டான்;)
குரோனஸ் தன் தங்கையான ரியாவை (Rhea) திருமணம் செய்து கொண்டார்; (அந்தக் காலத்தில் கடவுளின் முதல் குழந்தைகளின் வழக்கம் இது);
குரோனஸ் ஆகாயத்துக்கு கடவுள் ஆனதால், மழை பெய்ய வைத்து, பயிர்கள் செழித்து வளர வைத்து, நல்ல அறுவடை நடப்பதால் இவரை அறுவடைக் கடவுள் என்றும் சொல்வர்; அவர் கையில் உள்ள அரிவாள் அதற்குத்தான் வைத்திருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள்; அறுவடை திருவிழாவுக்கு Kronia என்று பெயர்; குரோனஸ் கடவுளின் பெயரை வைத்தே "குரோனியா அறுவடைத் திருவிழா" நடத்தப் படுவதாக கிரேக்க இதிகாசத்தில் சொல்லப் பட்டுள்ளது.
முதல் கடவுள் யுரானஸ் சிந்திய ரத்தத்தில் தனித்தனி பகுதிகளை தன் பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டார். ஆனாலும், கடைசி மகனான குரோனஸுக்கு சாபமும் கொடுத்து விட்டாராம்; “மகனான நீயே என்னை தாக்கியதால், உனக்குப் பிறக்கும் மகனும் உன்னைத் தாக்குவான்” என்று சாபமாம்;
குரோனஸ் - ரியா தம்பதிகளுக்கு 5 குழந்தைகள் பிறக்கிறது;
1) டெமிட்டர்
2) ஹெஸ்டியா
3) ஹெரா
4) ஹேடஸ்
5) பொஷிடான்
குரோனஸுக்கு அவரின் தந்தையின் சாபம் ஞாபகம் வருகிறது; தன் மகன் தன்னைக் கொல்வானே என்று பயம்; எனவே, குழந்தை பிறக்கப் பிறக்க, குரோனஸ் அந்தக் குழந்தைகளை முழுங்கி விடுவார்; இது வழக்கமாக இருந்திருக்கிறது; எல்லாக் குழந்தைகளையும் முழுங்கி விட்டார்;
அவரின் மனைவிக்கோ, இது கவலையளித்தது; ஒரு தந்திரம் செய்தாள்; கடைசி குழந்தையின் பெயர் ஜூயஸ் (Zeus); இந்தக் குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையை மறைத்து வேறு மலைப் பிரதேசத்துக்கு கணவனுக்குத் தெரியாமல் கொடுத்து அனுப்பி விட்டார்; அதற்குப் பதிலாக ஒரு துணியில் கல்லைச் சுற்றி, அதை தன் கணவனிடம் கொடுத்து, இதுதான் இப்போது பிறந்த அந்தக் குழந்தை என்று சொல்லி விட்டாள்; அவனும் அந்த 6-வது  குழந்தையையும் விழுங்கி விட்டான்; அந்த 6-வது குழந்தை ஜூயஸ் காட்டில் வளர்ந்து, வாலிபனாகி நாட்டுக்குள் வந்து, தன் தகப்பனுடன் சண்டையிட்டு அவனின் வயிற்றைக் கிழித்து, அவன் விழுங்கிய ஐந்து குழந்தைகளையும் உயிருடன் மீட்டான் என்கிறது கிரேக்க இதிகாசம்; அந்தச் சண்டையில் குரோன்ஸ் இறந்துவிட்டார்;
அதற்குபின் கடவுளாக கடைசிவரை இருந்து வந்தவர் இந்த ஜூயஸ் கடவுள்தான்; இவர் தான், கிரேக்க இதிகாசத்தின் தலைமைக் கடவுள் ஆவார்;


முதல் கடவுள் யுரானஸ் Uranus

 கடவுளின் தகப்பனார் யார்?
கிரேக்க இதிகாசம்;
ஆகாயத்திலிருந்து வந்தவர் தந்தை; பூமியில் இருந்து வந்தவர் தாய்; ஆகாயத்தில் யார் இருக்கிறார்? Uranus யுரானஸ் கடவுள்; யுரானஸ் என்றால் ஆகாயம், சொர்க்கம்; இவர்தான் ஆகாயத்தின் தந்தை; பூமித்தாய் கையா Gaia. இவர்கள் இருவரும் சேர்ந்து பெற்ற பிள்ளைகள்தான் டைட்டான்ஸ் Titans; ஒவ்வொரு நாளின் இரவிலும் ஆகாயக் கடவுளான யுரானஸ், பூமிக்கு வந்து பூமியை தழுவி மூடிக் கொள்வாராம்; அப்போது தன் மனைவி பூமித்தாயான கயாவுடன் கலந்து குழந்தை பெற்றுக் கொள்வார்களாம்; இருந்தாலும், யுரானஸ் தந்தைக்கு, தன் குழந்தைகள் மேல் பிரியம் இல்லையாம்; உண்மையில் குழ்ந்தைகளை வெறுக்கிறாராம்; முதல் ஆறு மகன்களுக்கும் முதல் ஆறு மகள்களுக்கும் டைட்டன்ஸ் என்று பெயர் கூட்டம் உண்டு; ஏதோ ஒரு கோபத்தில் தந்தை யுரானஸ், கடைசி மகன் டார்டாரஸை பூமிக்கு அடியிலுள்ள பாதாள சிறையில் அடைத்து வைத்து விடுகிறார்; இதனால் தாய்க்கு, கணவர் மீது, கோபம் உச்சிக்கு போகிறது; தாய் கயா, ஒரு அரிவாளாக உருவம் மாறி, தன் பிள்ளைகளிடம் "இந்த அரிவாளைக் கொண்டு உங்களின் தந்தையின் விரையை வெட்டி விடுங்கள்" என்று கூறுகிறார்; "கொலையும் செய்வாள் பத்தினி."  கடைசி மகன் "குரோனஸ்" இதற்கு உடன்படுகிறான்; துணிச்சல் மிக்கவன்; தகப்பனுடன் சண்டையிடுகிறான், தாய் சொன்னது போலவே தந்தையின் விரைகளை அறுத்து கடலில் வீசிவிடுகிறான்; இதில் பயந்துவிட்ட தந்தை, தன் மகன்களை அழைக்கிறார்; என் ரத்தம் விழுந்த இடங்கள், ஜியான்ட்ஸ் (வீரம் மிக்கவர்கள்) ஆகவும்; மலியா என்னும் நிம்ஸ் (மரத்தில் வசிக்கும் இளம் தேவதைகள்) ஆகவும்; என் விரைகள் விழுந்த கடல்பகுதி அபோர்டைட் (காதல், காமம், குழந்தை பெறும் தேவதைகள்) ஆகவும்; மாறவேண்டும் என்று கூறினார்
இந்த நிகழ்வுகளுக்குப் பின்னர், கடவுள் யுரானஸ், இரவில் மனைவியைத் தேடி பூமிக்கு வரவில்லை; எனவே பூமியும் இரவில் இருளால் தழுவப் படவில்லை; இத்துடன் கடவுள் குழந்தை பெற்றுக் கொள்வது நின்றுவிட்டது;
யுரானஸ்-கையாவுக்கு பிறந்த குழந்தைகளில் கடைசி மகன் துணிச்சல்மிக்க இந்த குரோனஸ் முக்கியமானவர்; (கடைசிப் பையன்தான், தாயின் சொன்னபேச்சை தட்டாமல் கேட்பவன் போல!) குரோனஸின் சகோதரிதான் ரியா; சகோதரியையே குரோனஸ் திருமணம் செய்து கொண்டான்; (கடவுளின் முதல் குழந்தைகள் என்பதால், அவர்கள் வழக்கப்படி அப்படித்தான் திருமணம் செய்து கொள்வார்களாம்);


ஒமெகா (Omega)

ஒமெகா (Omega):
கிரேக்க எழுத்துக்கள் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று அரிச்சுவடி இருக்கும்; இதில் ஒமெகா கடைசி எழுத்து; அதாவது 24 வது எழுத்து;
இதை எந்த அர்த்தத்தில் வைத்திருக்கிறார்கள் என்றால், ஓ-மெகா என்றால் "பெரியது" என்று; ஓ-மைக்ரா என்றால் சிறியது என்று;
இந்த எழுத்துதான் கிரேக்க எழுத்து வரிசையில் கடைசி என்பதால், கடைசியைக் குறிக்கும் எதையும் "ஒமெகா" என்றே குறிப்பிடுவர்; கடைசி குழந்தையைக்கூட, நாம், ஒமெகா குழந்தை என்று சொல்லலாம் போல!
ஒரு பெரிய "O" இதில் கீழே ஓட்டை போட்டிருந்தால் அது ஒமெகா சிம்பள்;
இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டின் சிம்பள் இந்த ஒமெகா அடையாளம்தான்;
கணிதம், இரசாயனம், பௌதீகம் இவைகளில் இது அடையாள எழுத்தாக உள்ளது;
.


பூமியின் வேகம்

பூமியின் நடுப்பகுதியின் சுற்றளவு 40,075 கி.மீ. (சுமார் 25,000 மைல்); இந்த பூமி, 24 மணி நேரத்தில் தன்னையே ஒரு சுற்று சுற்றிக் கொள்கிறது; அந்தக் கணக்குப்படி பார்த்தால், பூமியின் வேகம் ஒரு மணிக்கு சுமார் 1000 மைல் வேகத்தில் பூமி சுற்றுகிறதாம்; (சரியான கணக்குப்படி ஒரு மணிக்கு, 1041.7 மைல் வேகம்); பூமியானது, மேற்கிலிருந்து கிழக்காக தன்னைத்தானே சுற்றுகிறது;
பூமி, சூரியனை எவ்வளவு வேகத்தில் சுற்றி வருகிறது?
ஒரு நொடிக்கு 30 கி.மீ. வேகத்தில் பூமி, சூரியனைச் சுற்றுகிறதாம்; அதாவது ஒரு மணிக்கு 69,361 மைல் வேகத்தில் சுற்றுகிறாம்;
சூரியன் இந்த பிரபஞ்சத்தை எவ்வளவு வேகத்தில் சுற்றுகிறது?
சூரியன் இந்த பிரபஞ்சம் என்னும் கேலக்சியை ஒரு நொடிக்கு 220 கி.மீ. வேகத்தில் சுற்றுகிறதாம்; அதாவது ஒரு மணிக்கு 4,90,000 மைல் வேகத்தில் சுற்றுகிறதாம்;
ஒளியின் வேகம்?
லைட் என்னும் ஒளியின் வேகத்தை அளந்து சொல்வதற்கு "C" என்ற லத்தீன் மொழியான "Celeritas" என்ற வார்த்தையின் அடையாளத்தை வைத்துள்ளனர்; செலரிட்டாஸ் என்றால் லத்தீன் மொழியில் "பாய்ந்து செல்லும் வேகம்" என்று பொருள்; இந்தக் கணக்கில் ஒளியின் வேகத்தை கணக்கிட்டால், ஒரு செகண்ட் (நொடிக்கு) 1,86,280 மைல் வேகத்தில் ஒளி பாய்ந்து செல்லுமாம்; கண்ணால் கூட பார்க்க முடியாத வேகம் இது;
தூரத்தில் உள்ள நட்சத்திரங்களை எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று மைல், கிலோ மீட்டர் கணக்கில் எல்லாம் கணக்கிட முடியாதாம்; எனவே, இந்த ஒளி பாயும் வேகத்தை வைத்து கணக்கிட முடியுமாம்; அந்த ஒளி பாயும் வேகத்தை "ஒளி ஆண்டு" Light Year என்று கணக்கிடுகிறார்கள்; ஒரு ஒளி ஆண்டு என்றால் அது எவ்வளவு?

ஒரு ஒளி ஆண்டு = 9 லட்சம் கோடி கி.மீ. தூரம்;