பேரழகி ஹெலன் பிறந்த கதை:
கிரேக்க இதிகாசத்தில் இவளே பேரழகி; கடவுள்களின் அரசரான
ஜூயஸின் மகள்; ஆனால் ஜூயஸுக்கும், வேறு
ஒருவரின் மனைவியான லிடா என்ற பெண்ணுக்கும் பிறந்தவளே இந்த பேரழகி ஹெலன்; இவள் பிறப்பே வேடிக்கையானதும், வினோதமானதும்கூட;
கடவுள்களின் அரசன் ஜூயஸ் இந்த லிடா என்ற வேறு ஒரு அரசனின் மனைவி
மீது பேராசை கொண்டார்; நேரடியாக அடைய முடியாது என்று ஒரு
திருட்டு வேலை செய்தார்; (இந்திய இதிகாசங்களிலும் இப்படி பல
திருட்டு வேலைகள் சொல்லப் பட்டுள்ளன); ஜூயஸ் கடவுள் ஒரு
அன்னப் பறவை போல வேடமிட்டுக் கொண்டார்; அதை ஒரு கழுகு
துரத்துவது போல பயந்து நடுங்கி, இந்த லிடா பெண்ணின் மடியில்
வந்து விழுந்தார்; லிடா, அந்த அன்னப்
பறவையை எடுத்து ஆசையுடன் கொஞ்சினார்; அன்னமும் கொஞ்சியது;
இருவரும் கலந்து விட்டனர்; அதனால் அவள் ஒரு
கரு அவள் வயிற்றில் உருவானது; அன்றிரவே அவள் அவளின் கணவனுடன்
கூடினாள்; அதிலும் ஒரு கரு உருவானது; எந்தக்
கரு, யாருடையது என்று தெரியவில்லை; இரண்டு
ஆண்களின் கலப்பும் இருக்குமாம்; ஜூயஸ் கடவுள்; எனவே கடவுள் இறப்பு அற்றவர்; அவளின் கணவனோ மனிதன்;
இறப்பு உள்ளவன்; அந்த கலப்புக் கருவானது மனிதனும்
கலந்து, தெய்வீகமும் கலந்து பிறந்த குழந்தைகள்; கடவுளின் தெய்வீகத்துடன் பிறந்த ஹெலன் உலக பேரழகி ஆனாள்;
இவள்தான் இலியட்
காவியத்தின் நாயகி;